தோள் கண்டார் தோளே கண்டார் (கம்ப இராமாயணத் தேன் துளிகள்):

மிதிலை நகருக்குள் கோடி சூரியப் பிரகாசமாய் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, இலக்குவன் மற்றும் விஸ்வாமித்திர முனிவருடன் எழுந்தருளி வருகின்றார். திருவீதிகளெங்கும் கூடியிருந்த மகளிர் யாவரும் கோசலை மைந்தனின் திருமேனி வடிவழகினை வியந்து போற்றுகின்றனர். இராகவனின் திண்மையான திருத்தோள்களைக் கண்ணுறும் கன்னியர் அதனின்றும் பார்வையை விலக்க இயலாது அதனழகையே பருகிய வண்ணமிருக்கின்றனர். அது போன்றே வில்லேந்தும் அண்ணலின் தாமரை மலரனைய திருவடிகள் மற்றும் செம்மையுற விளங்கும் திருக்கைகள் ஆகிய அவயவங்களைத் தரிசிக்கும் மாதரும் அவற்றியிலேயே இலயித்துச் சிவானந்த வெள்ளத்தில் அமிழ்ந்திருக்கின்றனர்.

(பால காண்டம்: உலாவியற் படலம்: திருப்பாடல் 19):
தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண்டாரை ஒத்தார்!!!

இக்காரணத்தால் அப்பெண்டிருள் எவரொருவராலும் கோதண்ட மூர்த்தியின் திருமேனி வடிவழகு முழுவதையும் ஒருசேர தரிசிக்க இயலாது போகின்றது. இந்நிகழ்வு 'சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் எனும் இந்து தர்ம உட்பிரிவுகளின் வழி நிற்போர் அந்தந்த சமயம் முன்னிறுத்தும் தெய்வ வடிவத்தை மட்டுமே உபாசித்து, அதன் ஆனந்த அனுபவத்திலேயே இலயம் அடைந்து முழுநிறைவு கண்டு விடுவதை ஒத்திருக்கின்றது' என்று கவிச்சக்கரவர்த்தி உவமித்துக் காட்டுகின்றார் (சிவ சிவ).

கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் (கம்ப இராமாயணத் தேன் துளிகள்):

விஸ்வாமித்திரர், தான் புரியவிருக்கும் பெருவேள்வியை, அசுரர்களால் இடையூறு நேராத வண்னம் காத்துத் தரும் பொருட்டு, ஸ்ரீராமர்; இலக்குவன் இருவரையும், தசரத மன்னனின் அனுமதியுடன் அயோத்தியிலிருந்து அழைத்துச் செல்கின்றார். வழியிலுள்ள தாடகா வனத்தில் விஸ்வாமித்திரரின் கட்டளையின் பேரில் கொடிய அரக்கியான தாடகையை ஸ்ரீராமர் வதம் புரிகின்றார். வேள்வி நன்முறையில் நடந்தேறுகின்றது, பின்னர் சனக மன்னரின் அழைப்பினை ஏற்று, அன்னை சீதையின் சுயம்வர விழாவினைக் கண்டு வாழ்த்த, தசரத மைந்தர்கள் இருவருடனும், அவ்விடத்தினின்றும் புறப்பட்டு மிதிலாபுரி நோக்கிச் செல்கின்றார்.

வழியில் 'முனி பத்தினியான அகலிகை கௌதம முனிவரின் சாபத்தினால் கல்லாக மாறியிருந்த ஆசிரமம்' எதிர்ப்படுகின்றது. விஸ்வாமித்திரர் அகலிகையின் வரலாற்றினைத் தெரிவித்துப் பின் 'கோசலை மைந்தனே! உன் திருவடிகளால் அங்குள்ள கல்லினைத் தீண்டுவாய்' என்கின்றார். ஸ்ரீராமரின் 'பிறவிப் பிணி போக்கும் திருவடித் துகள்கள்' சிறிதே அக்கல்லினைத் தீண்ட, அண்டங்கள் யாவும் வியந்து போற்றுமாறு அக்கல்லானது அகலிகையாக உருமாறுகின்றது. சாப விமோசனம் பெறும் அன்னை அகலிகை புண்ணியத் திருமூர்த்தியான ஸ்ரீராமரை நன்றிப் பெருக்குடன் பணிகின்றார். இனி இதுகுறித்த கவிச்சக்கரவர்த்தியின் அற்புதத் திருப்பாடலை உணர்ந்துப் போற்றுவோம்,

(பால காண்டம்: கம்ப இராமாயணம்):
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே,
உன் கைவண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்!

(சுருக்கமான பொருள்):
ஸ்ரீராமா! மழை வண்ணத்து அண்ணலே! அன்று தாடகை வத நிகழ்வில் உனது கை வண்ணத்தினைக் (திருத்தோள்களின் வலிமையை) கண்டு வியந்தேன், இன்று சிறு கல்லானது அகலிகையாக மாறிய அற்புத நிகழ்வின் மூலம் உன் கால் வண்ணத்தையும் (திருவடிப் பெருமையையும்) கண்ணுற்று மகிழ்ந்தேன். இத்தகு மேன்மையுடைய நீ இப்புவியில் அவதரித்துள்ள நிலையில் இனி எவரொருவரும் எக்காரணத்தினாலும் துன்புறவே மாட்டார் என்று விஸ்வாமித்திரர் போற்றுகின்றார்.

பால இராமனுக்கு அருணகிரிநாதர் அருளியுள்ள பிள்ளைத் தமிழ் (திருச்செந்தூர் திருப்புகழ் நுட்பங்கள்):

வால்மீகி இராமாயணத்திலும், கம்ப இராமாயணத்திலும் ஸ்ரீராமரின் பால பருவ லீலைகள் பெரிதாக ஏனோ குறிக்கப் பெறவில்லை. இக்குறையினைத் தமிழ்க்கடவுளின் பரிபூரணக் கடாட்சம் பெற்றுள்ள அருணகிரிப் பெருமான் 'தொந்தி சரிய' என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் போக்கியுள்ளார். அன்னை கோசலை 'தளர் நடைப் பருவத்திலுள்ள இராமனைப் பாலுண்ண வருமாறு பரிவுடன் அழைக்கும்' திருக்காட்சியினைப் பின்வரும் திருப்பாடலில் போற்றி மகிழ்கின்றார்.

(தொந்தி சரிய என்று துவங்கும் திருப்பாடலின் இறுதியில் இடம்பெறும் வரிகள்):
எந்தை வருக ரகுநாயகவருக
     மைந்த வருக மகனேஇனிவருக
          என்கண் வருக எனதாருயிர்வருக....அபிராம
-
இங்கு வருக அரசே வருகமுலை
     உண்க வருக மலர்சூடிடவருக
          என்று பரிவினொடு கோசலைபுகல....வருமாயன்
-
சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவுமழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவேரொடுமடிய....அடுதீரா
-
திங்களரவு நதிசூடியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்திநகரில் இனிதேமருவிவளர்...பெருமாளே.

'எந்தையே, ரகுநாயகா, மைந்தனே, மகனே, என் கண்ணே, எனதாருயிரே, எனதரசே' என்று கோசலையன்னை பலவாறு கொஞ்சி மகிழும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மருமகனே, திங்கள் சூடிய சிவபரம்பொருள் தந்தருளிய குமரனே, அலைகள் எந்நேரமும் கரையினை மோதிய வண்ணமிருக்கும் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளியுள்ள செந்தில் வேலவனே என்று போற்றித் திருப்பாடலினை நிறைவு செய்கின்றார் திருப்புகழ் ஆசிரியர்.

சிதம்பரம் திருப்புகழில் அகலிகை சாப விமோசன நிகழ்வு:

(கொள்ளை ஆசை என்று துவங்கும் தில்லைத் திருப்புகழில் இடம்பெறும் சில வரிகள்):
கல்லிலே பொற்றாள் படவேயது
நல்ல ரூபத்தேவர கானிடை
கெளவை தீரப் போகும்இராகவன் மருகோனே

கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாக மாறி துன்பமுற்றிருந்த அன்னை அகலிகை, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பொன் போலும் திருவடிகள் சிறிதே தீண்டப் பெற்ற நன்மையினால் சாப விமோசனமுற்று மீண்டும் தன் பண்டைய திவ்யத் திருமேனியோடு வெளிப்பட்ட அற்புத நிகழ்வினைப் போற்றுகின்றார் அருணகிரிப் பெருமான்.

சிவ வில்லினை வளைத்த கோதண்ட இராமன் (எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்): கம்ப இராமாயணத் தேன் துளிகள்):

ஜனக மன்னன் மிதிலைச் செல்வியான அன்னை சீதைக்கென அமைத்திருந்த சுயம்வர மண்டபம், நடுநாயகமாய் பிரமாண்டமான சிவதனுசு, திண்தோளுடைய எண்ணிறந்த முடிமன்னர்கள் முழுமுனைப்புடன் முயன்றும் வில்லினை ஒருசிறிதும் அசைக்கக் கூட இயலவில்லை. ஜனகரின் முகத்திலோ புதல்வியின் எதிர்காலம் குறித்த கவலை. இக்கட்டான இச்சூழலில், விஸ்வாமித்திர முனிவரின் ஆணையினை ஏற்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அச்சிவ வில்லினை நோக்கிச் செல்கின்றார்.

அவையெங்கும் ஒரே நிசப்தம், தசரத மைந்தனின் திருமேனி வடிவழகில் ஈடுபட்டிருந்த அவையோர், கணநேரமும் கண் இமைக்காது 'மழை வண்ணத்து அண்ணலையே' பார்த்த வண்ணமிருக்கின்றனர். அவ்வளவு கவனமாக இருந்தும் அவர்களால் ஸ்ரீராமர் வில்லினை ஏந்தும் காட்சியை மட்டுமே காண முடிகின்றது, காற்றினும் கடிய வேகத்தில் இராகவன் வில்லின் ஒரு முனையினை ஊன்றிய நிகழ்வையோ, மறு முனையினை வளைத்து நாணேற்றிய செயலையோ எவரொருவரும் கண்டிலர். அண்டங்கள் யாவும் அதிர்வது போன்ற பேரொலியுடன் சிவ தனுசு முறிந்திருக்கும் காட்சி மட்டுமே இறுதியில் அவர்களுக்குக் காணக் கிடைக்கின்றது.
*
இனி மேற்குறித்துள்ள நிகழ்வு தொடர்பான கம்ப இராமாயணத் திருப்பாடலை உணர்ந்து இன்புறுவோம்,
-
தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!!!
-
(குறிப்பு: 'கடுப்பினில்' எனும் சொல் வேகத்தைக் குறிக்க வந்தது)

அயோத்தி இராமன்:

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, இராவண சம்ஹாரத்திற்குப் பிறகு சுமார் 11,000 ஆண்டுகள் அயோத்தியில் ஆட்சி புரிந்து வந்ததாக வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டம் பதிவு செய்கின்றது. இவற்றுள் முதல் 1000 ஆண்டுகளின் முடிவிலேயே, அன்னை சீதை தன் திருஅவதாரத்தை நிறைவு செய்து கொண்டு பூமிக்குள் சென்று விட, மீதமுள்ள 10,000 ஆண்டுகளுக்குத் தவக்கோலத்திலிருந்த வண்ணமே நல்லாட்சி புரிந்துப் பின் இறுதியாய், பரதன்; இலக்குவன்; சத்ருக்கனன்; அயோத்தி மக்கள் அனைவரும் உடன் வர, பரம புண்ணியமான சரயு நதியில் இறங்கித் தன் திருஅவதாரத்தினை நிறைவுறச் செய்து மீண்டும் ஸ்ரீவைகுந்தம் திரும்புகின்றார். 11,000 ஆண்டுகள் ஸ்ரீராமரின் திருவடிகள் தோய்ந்துள்ள பரம புண்ணியமான அயோத்தி நகரினைத் தரிசித்து உய்வு பெறுவோம் (ஸ்ரீராமஜெயம்).

ஸ்ரீராம ராம ராம!!!


(கம்ப இராமாயணம்: வாலி வதைப் படலம்):
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை, கண்களில் தெரியக் கண்டான்.

கம்ப இராமாயணம்: கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.