ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி):

திருமாலின் 9ஆவது திருஅவதாரமாக ஸ்ரீகிருஷ்ணன், தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தின் முந்தைய யுகமான துவாபர யுகத்தின் இறுதியில், (புதுதில்லியிலிருந்து சுமார் 170 கி.மீ தொலைவிலுள்ள) மதுரா நகரில் அவதரிக்கின்றான், இந்து தர்மம் போற்றும் ஏழு மோட்ச புரிகளுள் (ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமியான) மதுராவும் ஒன்று. கண்ணன் தன் அவதார நோக்கம் நிறைவுற்று மீண்டும் ஸ்ரீவைகுந்தம் திரும்பிய கணமே துவாபர யுகம் முடிவுற்றுக் கலியுகம் துவங்கப் பெறுகின்றது. கலியுகக் காலகட்டம் மொத்தம் 4,32,000 ஆண்டுகள், இந்நெடிய யுகக் கணக்கில் தற்பொழுது சுமார் 5100 ஆண்டுகளே கடந்துள்ளன (சிவ சிவ).

பத்தற்கிரதத்தைக் கடவிய பச்சைப்புயல் (அருணகிரிநாதர் கண்ணனுக்கு அளித்த அடைமொழி):

பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ...... ஒருநாளே
-
தோழனாகவும், பரம பக்தனாகவும் விளங்கிய அர்ஜுனனுக்கு மாபாரதப் போரில் தேரோட்டியாகச் சென்ற பச்சைப் புயல் (பத்தர்க்கு இரதத்தைக் கடவிய) என்று 'முத்தைத் தரு' எனும் முதல் திருப்புகழிலேயே கண்ணனைப் போற்றி மகிழ்கின்றார் அருணகிரிப் பெருமான்.


பச்சைமா மலைபோல்மேனி:

(திருமாலை - தொண்டரடிப்பொடி ஆழ்வார்)
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!!

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண:

(உயிர்க்கூடு என்று துவங்கும் பழனித் திருப்புகழின் இடையில் இடம்பெறும் வரிகள்):
தயிர்ச்சோரன் எனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி மருகோனே
-
'தயிரைத் திருடுபவன்' என்று வசை பாடுகின்ற, கண்ணனின் திருவடிகளைத் தவிர்த்துப் பிறிதொன்றினை அறியாத கோபிகைகளுடன் எண்ணிறந்த திருவிளையாடல்களைப் புரிகின்ற ஸ்ரீகிருஷ்ணனின் மருமகனே என்று கண்ணனையும் ஆறுமுகக் கடவுளையும் ஒருசேரப் போற்றுகின்றார் அருணகிரிப் பெருமான்.